Search This Blog

Thursday, December 29, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -13


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

                குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும், சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும், தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ, எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பது போலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து, நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்து ஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க, தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !


கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்; பங்கயம் - தாமரை; புனல் - நீர்.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -12

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

                பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்; தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான்; இந்த விண்ணையும், மண்ணையும், நம் எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும் வருபவன்; அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும், மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள் ரீங்காரமிடவும், பூக்கள் நிறைந்த இக்குளத்தில்  ஈசனின்
பொற்பாதத்தை வாழ்த்திக்கொண்டே நீராடுங்கள் !


குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

                வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின் மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில் உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் ! நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !



மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்; அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.
a

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே 
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.


                அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன; அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்; ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே ! அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார் உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!


சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத; கோது - குற்றம்; பரிசு - வழி.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -9


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


 பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே ! இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே ! உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கே நண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்; அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப் பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !


பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு - அடிமை

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -8

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

 தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன. இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது. ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின் பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த) பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ? அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும் முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !


குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி); கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்; ஏழை - பெண்(சக்தி).

Wednesday, December 28, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -7


அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

 தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?! பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம் பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று சொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய். எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"
என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம். இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே ! தூக்கத்தின் தன்மை தான் என்னே !


உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்; வாளா - சும்மா; பரிசு - தன்மை.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -6

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.

 தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று, "நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு, வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும் அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத் தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் ! எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான  சிவபெருமானைப் பாடு !


நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்; ஊன் - உடல்.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -5

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

 தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாத மலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று) பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற (இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற ! இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு
குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே ! மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!


பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்; ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

 தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! இன்னுமா விடியவில்லை ?
படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்) தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ?
 தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம். கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும் போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.  வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !


ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில கையாய்).

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -3


முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

 தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே ! எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் ! (இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !
 படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே ! இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே ! (என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?
 தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத் தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப் பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !


பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு; புன்மை - கீழ்மை.

Translate